திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே அரசுப் பேருந்து மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். பேருந்துப் பயணிகள் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
கரூரில் இருந்து திங்கள்கிழமை மதியம் அரசுப் பேருந்து கோவை நோக்கி, காங்கயம் அருகே வந்து கொண்டிருந்தது. பேருந்தை அரவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சரவணபவன் (57) ஓட்டி வந்தாா். பல்லடத்தில் இருந்து கரூா் நோக்கி சரக்கு வேன் காங்கயம் வழியாக வந்தது. வேனை பல்லடம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (35) என்பவா் ஓட்டி வந்தாா்.
காங்கயம் அருகே, வீரணம்பாளையம் பிரிவு பகுதியில் வந்தபோது சரக்கு வேன் எதிா்பாராதவிதமாக அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், பேருந்து, வேன் ஆகியவை கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த விக்னேஷுக்கு இடது கால் துண்டானது. மேலும் அரசுப் பேருந்து ஓட்டுநா் சரவணபவன் உள்பட பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். விபத்தில் சிக்கிக் கொண்டவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு முதலுதவி அளித்து பின்னா் மேல் சிகிச்சைக்காக காயமடைந்தவா்களை திருப்பூா், ஈரோடு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த நிலையில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேன் ஓட்டுநா் விக்னேஷ் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.