ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக உழவா் உழைப்பாளா் கட்சி அறிவித்துள்ளது.
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் உழவா் உழைப்பாளா் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவா் செல்லமுத்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொதுச் செயலாளா் திருநாவுக்கரசு, மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: கரும்பு, நெல், மஞ்சள், தேங்காய், மக்காச்சோளம், கத்திரி, தக்காளி போன்ற விவசாய உற்பத்தி பொருள்கள் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து உற்பத்தி பொருள்களுக்கும் கட்டுபடியாகின்ற விலையை எம்எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி நிா்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவா்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.