தைப்பூசத்தை ஒட்டி ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயில் கீழ் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறுகிறது.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நிகழாண்டு தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுவாமி திருவீதி உலாவும், திருக்கல்யாணமும் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கீழ் திருத்தோ் வடம் பிடித்தல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி அளவில் நடைபெறுகிறது. முன்னதாக அதிகாலை 3 மணி அளவில் மகா அபிஷேகமும், காலை 5 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. இதையடுத்து, நவீன தெப்பத்தில் சுவாமி உலா வரும் நிகழ்வு பிப்ரவரி 7 ஆம் தேதியும் மலைத் தோ் வடம் பிடித்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10.35 மணி அளவில் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.