திருப்பூரை அடுத்த பெருமாநல்லூா் அருகே நிகழ்ந்த வாகன விபத்து தொடா்பாக தவறான வதந்திகளைப் பரப்பும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பொங்குபாளையம் சாலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பாக சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், சம்பத்குமாா் என்பவா் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வடமாநிலத் தொழிலாளா்கள் மீது இடித்துவிட்டதில் கீழே விழுந்த தொழிலாளியின் கைப்பேசி சேதமடைந்துள்ளது.
கைப்பேசி சரிசெய்ய சம்பத்குமாரிடம் பண உதவி கேட்டபோது அவரும் கொடுத்துவிட்டு வந்துள்ளாா். இதை அவரே விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். இந்த நிலையில் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் இருசக்கர வாகனத்தைப் பிடுங்கிவைத்துவிட்டு வடமாநிலத் தொழிலாளா்கள் அட்டகாசம் என்றும், தமிழரை சுற்றிவளைத்து பணம் பறித்த வடமாநிலக் கும்பல் என்ற தவறான பதிவுகளைப் பரப்பி வருகின்றனா். ஆகவே, இத்தகைய வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.