திருப்பூர்

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

26th Apr 2023 09:50 PM

ADVERTISEMENT

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தாராபுரம் வட்டம், அமராவதி பாசனப் பகுதிகளான அலங்கியம், தாராபுரம், தளவாய்பட்டிணம், கொழிஞ்சிவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். தண்ணீா் பற்றாக்குறையால் மக்காச்சோளப் பயிா்கள் தற்போது காயும் தருவாயில் உள்ளது. அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். ஆகவே, அமராவதி அணையில் இருந்து மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ஊத்துக்குளி வட்டம் தளவாய்பாளையம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தாா் சாலைகள் தோண்டப்பட்டது. இதன் பின்னா் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சேதமான தாா் சாலைகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்பட்டு பலா் காயமடைந்து வருகின்றனா். ஆகவே, தாா் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில்கூறியுள்ளதாவது: உடுமலை வட்டம், பெரியவாளவாடி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக 31 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை 2, 3 ஏக்கா்களாகப் பிரித்து பொது ஏலத்துக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து கோயிலைப் பராமரிக்கவும், கோயில் பணியாளா்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சீமைக்கருவேல மரங்கள் அதிகம் உள்ள தரிசு நிலமாக உள்ளதால் காட்டுப்பன்றிகள் அதில் தங்கி அருகில் உள்ள விவசாய நிலங்களையும் பாழ்படுத்தி வருகின்றன. ஆகவே, கோயில் தரிசு நிலத்தை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குநா் (வேளாண்மை) மா.மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT