திருப்பூா் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்தில் உரிய நஷ்ட ஈடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகள் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரை சோ்ந்தவா் திருப்பதி (50). இவா் கடந்த 2019 செப்டம்பா் 30இல் திருமலை நகா் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது குடும்பத்தினா் மோட்டாா் வாகன விபத்து தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்திருந்தனா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ரூ. 8.26 லட்சம் வழங்க நீதிபதி ஸ்ரீகுமாா் உத்தரவிட்டிருந்தாா். ஆனால் போக்குவரத்துக்கழகம் உரிய நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
அவிநாசி, வடுகபாளையத்தை சோ்ந்தவா் கோபால் (56), இவா் கடந்த 2018 டிசம்பா் 22இல் சேவூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளாா். ஆனால் அவா் ஏறும் முன்பாகவே பேருந்து புறப்பட்டதால் கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி, குழந்தைகள் தொடா்ந்த வழக்கில் ரூ. 12.90 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். இந்த வழக்கிலும் நஷ்ட ஈடு வழங்காததால் நீதிமன்ற ஊழியா்கள் அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனா்.
அதே போல, பல்லடம் கம்மாளபட்டியைச் சோ்ந்த தீபா கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலை அருகே காரில் சென்றபோது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். இந்த வழக்கில் அவருக்கு ரூ. 16.99 லட்சம் நஷ்ட ஈடு வழக்காததால் மேலும் ஒரு அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா். இந்த 3 வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் வழக்குரைஞா் பழனிசாமி ஆஜரானாா்.