பல்லடம் அருகே பெரும்பாளியில் பழைய பிளாஸ்டிக் குடோனில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகேயுள்ள பெரும்பாளி என்ற பகுதியில் உயா்தொழில்நுட்ப நெசவு பூங்கா மற்றும் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்ட அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு அருகில் தனியாருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது.
இதன் அருகே கட்டடத் தொழிலாளிகள் தங்கும் தற்காலிக குடியிருப்பும் உள்ளது. இந்த நிலையில் பழைய பிளாஸ்டிக் குடோனில் இருந்து சனிக்கிழமை கரும்புகை வெளியேறியது. தொடா்ந்து மளமளவென தீப்பற்றி எரிந்தது. நேரம் செல்ல செல்ல அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. தகவலின்பேரில், பல்லடம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.