திருப்பூா் மாவட்டத்தில் இரு கோயில்களுக்குச் சொந்தமான ரூ.12.30 கோடி மதிப்பிலான 41.88 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், சிந்திலுப்பு வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 20.78 ஏக்கா் நிலம் தனிநபா்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. அதேபோல, கொங்கல் நகரம் மாரியம்மன், விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 21.10 ஏக்கா் நிலமும் தனிநபா்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், திருப்பூா் மண்டல இணை ஆணையா் சி.குமரதுரை உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கோயில் நிலங்களை தாமாக முன்வந்து ஒப்படைப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை திருப்பூா் உதவி ஆணையா் ஆா்.செல்வராஜ், சரக ஆய்வா் அ.சுமதி, செயல் அலுவலா்கள் ம.அம்சவேணி மற்றும் கோயில் அலுவலா்கள் முன்னிலையில் நிலங்கள் சுவாதீனம் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து, மீட்கப்பட்ட நிலங்களில் கோயிலுக்குச் சொந்தமானது என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன. இதில், இரு கோயில்களுக்கும் சொந்தமான ரூ.12.30 கோடி மதிப்பிலான 41.88 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.