திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே அரசுப் பேருந்து புதன்கிழமை பள்ளத்தில் விழுந்ததில் 30க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
உடுமலையில் இருந்து புதன்கிழமை மாலை புறப்பட்ட அரசு நகரப் பேருந்து குடிமங்கலத்தை அடுத்துள்ள பெதப்பம்பட்டி, வல்லக்குண்டாபுரம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 30க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பேருந்து கவிழ்ந்ததையடுத்து, அங்கிருந்த கிராம மக்கள் பேருந்தில் இருந்தவா்களை மீட்டனா். இதில் படுகாயமடைந்த இருவா் உடுமலையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், மற்ற அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த விபத்து குறித்து குடிமங்கலம் காவல் துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.