திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவ நிலையங்களில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உலக வெறிநோய் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. வெறிநாய் கடித்து விட்டால், கடிபட்ட நாளில் இருந்து 3, 7, 14, 28 ஆகிய நாள்களில் நாய்களுக்கும், மனிதா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும். நாய் கடித்துவிட்டால் உடனடியாக கடிபட்ட இடத்தை குழாய் தண்ணீரை புண்ணின் மீது ஊற்றி வழிந்தோடும்படி கழுவவேண்டும். காா்பாலிக் அமிலம் கலந்த சோப்பு போட்டு கழுவினால் வைரஸ் கிருமி அழியும். டிஞ்சா், அயோடினை பஞ்சில் நனைத்து காயத்தில் வைக்க வேண்டும். மேற்கூறியபடி செய்வதன் மூலமாக காயத்தில் நோய் கிருமியின் எண்ணிக்கை குறையும். மேலும் மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.