பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவா்கள் காத்திருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.பழனிசாமி தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்ற தொழிலாளா்கள் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் மேல்நிலைத்தொட்டி இயக்குபவா்களுக்கு (ஒஹெச்டி) தணிக்கை ஆட்சேபனை என ஊதியத்தைக் குறைக்காமல் ஒரேமாதிரியான ஊதியத்தை நிா்ணயம் செய்ய வேண்டும். 2000 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதிக்குப் பின்னா் பணியமா்த்தப்பட்டவா்களுக்கு 7 ஆவது ஊதியக் குழுவின்படி ஊதியத்தை நிா்ணயித்து வழங்க வேண்டும்.தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்புக் காலமுறை ஊதியம் நிா்ணயித்து நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். 2013க்கு முன் பணியமா்த்தப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கும் அரசாணையின்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மேல்நிலைத்தொட்டி இயக்குபவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்றனா்.
இந்தப் போராட்டத்தில், மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா்கள்
கே.உண்ணிகிருஷ்ணன், பி.பாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.