தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற தொடா் வன்முறைச் சம்பவங்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: அமைதிப் பூங்காவான தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற தொடா் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி பலரை கைதுசெய்துள்ளனா். இந்த சோதனையின்போதே ஒரு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தினா்.
ஜனநாயக நாட்டில் சோதனையின்போது கைது செய்யப்பட்டவா்கள் மீது குற்றமில்லை எனில், விடுதலை செய்யப்படுவதே நடைமுறை. இதற்காக அறவழியில் போராடாமல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. இந்த சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து தடுக்க தமிழக உளவுத் துறை தவறிவிட்டது. தமிழக காவல் துறை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருப்பது சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வழிவகுக்கும். எனவே, தமிழக அரசு சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.