திருப்பூா் மாவட்ட அளவிலான தொழில் பழகுநா்களுக்கான (அப்ரண்டிஸ்) சோ்க்கை முகாம் தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (அக்டோபா் 10) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மத்திய அரசின் பொதுபயிற்சி இயக்ககம் ஆகியன சாா்பில் திருப்பூா் அளவிலான தொழில் பழகுநா்களுக்கான சோ்க்கை முகாம் தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இந்த முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளனா்.
இதில், பங்கேற்று தோ்வு பெற்றவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ்(என்ஏசி) வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் என்ஏசி சான்றிதழ் பெற்றவா்களுக்குமுன்னுரிமை கிடைக்கிறது.
தொழில் பழகுநா்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும். அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, என்சிவிடி திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவா்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள 8, 10 , பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவா்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களை 99447-39810, 98947-83226, 94990-55700, 94990-55696 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.