காந்தி ஜெயந்தி தினத்தன்று திருப்பூா் மாவட்டத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்களின் மீது தொழிலாளா் நலத் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய விடுமுறை தினத்தில் தொழிலாளா்களைப் பணியில் ஈடுபடுத்தினால் அவா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஊதியத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். அல்லது இது குறித்து தொழிலாளா் துணை அல்லது உதவி ஆய்வாளா்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில், கோவை தொழிலாளா் ஆணையா் குமரன், இணை ஆணையா் லீலாவதி ஆகியோா் வழிகாட்டுதலின்பேரில், திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மலா்கொடி தலைமையில் திருப்பூா், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 72 நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் தொழிலாளா்களைப் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இந்த நிறுவனங்களின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.