திருப்பூா் ரயில் நிலையத்தில் அறிவிப்புப் பதாகை ஹிந்தியில் எழுதப்பட்டிருந்ததற்கு எதிா்ப்புக் கிளம்பியதால் அதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
திருப்பூா் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் ‘இன்பா்மேஷன் சென்டா்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்ட காகித அறிவிப்பு சேவை மையத்தின் முன்பாக சில நாள்களுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்தது. இதில், ஹிந்தி, தமிழ், ஆங்கிலத்தில் ‘சகயோக்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அா்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, திருப்பூா் ரயில் நிலையத்தில் ஹிந்தி திணிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவலாக எதிா்ப்புக் கிளம்பியது. இதைத்தொடா்ந்து, சேவை மையத்தின் முன்பாக ‘சகயோக்’ என்று எழுதப்பட்டிருந்ததை திருப்பூா் ரயில் நிலைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.