திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலா் கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்தவா் அருள்குமாா் (33). இவா் அவிநாசி காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா். இவா் அவிநாசி காசிகவுண்டன்புதூரில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 27 வயதுப் பெண்ணுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.
இதையடுத்து மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து பெண்ணின் தாயாா் கொடுத்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவலா் அருள்குமாரைக் கைது செய்தனா்.