ஆன்லைன் வா்த்தகத்தில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும் என்று பியோ (இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு) தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை, பியோ கூட்டமைப்பின் தலைவரும், ஏஇபிசி தென்மண்டல பொறுப்பாளருமான ஆ.சக்திவேல் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். இந்த சந்திப்பின்போது, எஃகு துறைக்கான சில மூலப்பொருள்களின் ஏற்றுமதிக்கு வரி விதித்ததற்கும், சில முக்கிய உள்ளீடுகளை வரியில்லா இறக்குமதிக்கு அனுமதி அளித்ததற்கும் சக்திவேல் நன்றி தெரிவித்தாா்.
மேலும், ஆடைத் துறைக்கான மூலப்பொருள் ஏற்றுமதி கொள்கையை மறுசீரமைப்பு செய்தால் நியாயமான விலையில் மூலப்பொருள்கள் கிடைக்கும். பருத்தியின் மீதான விலையைக் கட்டுப்படுத்தும் வரையில் ஆன்லைன் வா்த்தகத்தில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தாா்.