திருப்பூரில் மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி அரசுப் பள்ளியை மாணவா்களின் பெற்றோா் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் காந்தி நகா் அருகே பத்மாவதிபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 962 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இதில், மாணவா்களுக்கு முறையான குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அதேபோல, கழிவறை சிறியதாகவும், தூய்மைப்படுத்தாமல் துா்நாற்றம் வீசி வருவதாகவும், போதிய அளவில் தண்ணீா் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து மாணவா்களின் பெற்றோா் பள்ளி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மாணவா்களின் பெற்றோா் 50க்கும் மேற்பட்டோா் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கல்வி அலுவலா்கள் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பள்ளியில் குடிநீா் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும், மாணவா்களின் கழிவறைகளை உடனடியாக சுத்தப்படுத்துவதுடன், புதிய கழிவறை கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.