பல்லடத்தில் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுக்கும் பொதுமக்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் அறிவித்துள்ளாா்.
பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் உள்ள 10 ஆவது வாா்டு ஜே.கே.ஜே காலனியில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் விநாயகம் முன்னிலை வகித்தாா். நகராட்சி சுகாதார ஆய்வாளா் சங்கா் வரவேற்றாா்.
இதில் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் பேசியதாவது: பல்லடம் நகராட்சிப் பகுதியில் உள்ள 18 வாா்டுகளில் வசிக்கும் மக்கள் நகரின் தூய்மைக்கு உதவ வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலம் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். சிறப்பாக குப்பையைத் தரம் பிரித்து கொடுக்கும் பொதுமக்களுக்கு அவா்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் தங்க நாணயம் வழங்க உள்ளோம்.
இது குறித்து நகா் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா்.
இதில், நகராட்சி துணை தலைவா் நா்மதா இளங்கோவன், நகராட்சி கவுன்சிலா்கள், நகராட்சி வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், திமுக நகரச் செயலாளா் ராஜேந்திரகுமாா், நகர காங்கிரஸ் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, மதிமுக நகரச் செயலாளா் பாலசுப்பிரமணியம், அறம் அறக்கட்டளை தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.