தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாரச் சந்தையில் ஆடு, கோழிகளின் வரத்து சனிக்கிழமை அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்தது.
தாராபுரம் அருகே உள்ள குண்டடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுகிறது.
இந்த சந்தைக்கு குண்டடம், ஊதியூா், கொடுவாய், தாராபுரம், மேட்டுக்கடை, பொங்கலூா், சூரியநல்லூா், பூளவாடி, பெல்லம்பட்டி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
அதேபோல, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, கேரளம், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகளும் அதிக அளவில் இந்த சந்தைக்கு வந்து ஆடு, கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.
இந்நிலையில், ஆடு, கோழிகளின் வரத்து இந்த வாரம் அதிகரித்ததால் ஆட்டின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி மகேந்திரன் கூறியதாவது: இந்த சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாலும், இறைச்சி விற்பனை குறைவாக இருந்ததாலும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க ஆா்வம் காட்டவில்லை.
கடந்த வாரங்களில் சுமாா் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.4,500க்கு மட்டுமே விற்பனையாகிறது.
அதேபோல, ரூ.12,500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடு தற்போது ரூ.8,500க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. நாட்டுக் கோழிகளின் விலையும் விழ்ச்சியடைந்துள்ளது என்றாா்.