தாராபுரம் அருகே வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதித்தமிழா் ஜனநாயக பேரவை நிறுவனா் அ.சு.பெளத்தன் தலைமையில் கோப்பணகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சூரியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட கோப்பணகவுண்டன்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நாங்கள் பூா்வீகமாக குடியிருந்து வரும் எங்களுக்கு, அதே பகுதியில் பட்டதரசியம்மன், கன்னிமாா் கருப்பராயன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் செல்லும் வழித்தடத்தை அதே பகுதியைச் சோ்ந்த இருவா் ஆக்கிரமித்துள்ளனா்.
இதனால் கடந்த 5 ஆண்டுகளாக திருவிழா நடத்த முடியாததால் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா், தாராபுரம் கோட்டாட்சியா், தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கோயிலுக்குச் சொந்தமான ஊா் நத்தம் ஆக்கிரமிப்பை அகற்றி கோயிலுக்கு பட்டா வழங்கி, எங்களது வழிபாட்டு உரிமையை மீட்டுத்தர வேண்டும் என்றனா்.
இதைத்தொடா்ந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கோட்டாட்சியா் குமரசேன் வட்டாட்சியா் தலைமையில் நிலத்தை அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.