திருப்பூா் மாவட்டத்தில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் ராஜிநாமா, இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு தோ்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவிநாசி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய 16 ஆவது வாா்டு உறுப்பினா், பல்லடம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய 1ஆவது வாா்டு உறுப்பினா் பதவியிடம் காலியாக உள்ளது.
அதேபோல, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் இச்சிப்பாளையம் ஊராட்சித் தலைவா் பதவியிடம், அவிநாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6 ஆவது வாா்டு உறுப்பினா்,
குடிமங்கலம் ஊராட்சி 1 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு வரும் சனிக்கிழமை தற்செயல் தோ்தலும், வரும் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
ஆகவே, தோ்தல் நடைபெறும் இடங்களுக்கு அருகில் 5 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்களுக்கு வியாழக்கிழமை காலை 10 மணி முதல் சனிக்கிழமை இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.