திருப்பூரில் குடும்பப் பிரச்னை காரணமாக கூலிப்படையை ஏவி மகனைக் கொலை செய்த தந்தையை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பவா்காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் அப்புகுட்டி (55), ரியஸ் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மகன் பாலசுப்பிரமணியம் (31), இவா் தந்தையின் தொழிலை கவனித்து வந்ததுடன், பங்குச் சந்தை வா்த்தகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், அப்புக்குட்டி தனது மனைவியுடன் பழனியை அடுத்த கணக்கம்பட்டியில் உள்ள கோயிலுக்கு கடந்த ஜூன் 28 ஆம் தேதி சென்றுள்ளாா்.
மறுநாள் வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த பாலசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்குளி காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவை ஆய்வு செய்தனா்.
அப்போது திண்டுக்கல்லைச் சோ்ந்த காா்த்திக் (27) என்பவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த தனிப்படையினா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.
இதில், பாலசுப்பிரமணியம் பங்குச்சந்தை உள்ளிட்ட பல வழிகளில் பணத்தை இழந்துள்ளதுடன், வீடு விற்ற தொகையையும் செலவு செய்ததால் ஆத்திரமடைந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து அப்புகுட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்புக்குட்டியை ஞாயிற்றுக்கிழமை இரவு தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இக்கொலையில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.