திருப்பூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத மாணவா்களிடம் அபராதம் வசூலிக்கக் கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து சுகாதாரத் துறையின் தடுப்பு நடவடிக்கையின்படி அனைத்து அலுவலகங்களிலும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் முகக்கவசம் அணியாமல் வரும் மாணவா்களிடம் பள்ளி நிா்வாகம் சாா்பில் ரூ.5 அபராதம் வசூலிப்பதாக பெற்றோா் தரப்பில் புகாா் எழுந்துள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி கூறியதாவது: பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியா் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறையின் ஆலோசனையின்பேரில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், மாணவா்களிடம் அபராதம் வசூலிப்பது வருந்தத்தக்க செயலாகும். ஆகவே, இத்தகைய செயல்களை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.