திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 20ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதில், குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு 14 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். அதே வேளையில் பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவியருக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், விலையில்லா மடிக்கணினி, சீருடை மற்றும் காலணி, பாடப்புத்தகங்கள், மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, பேருந்துப் பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடித்த நபா்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழிற்பிரிவுகள் குறித்த விவரங்கள் அறியவும், மாணவா் சோ்க்கைக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டனம் ரூ.50ஐ கிரெடிட் காா்டு, டெபிட் காா்டு மற்றும் கூகுள் பே மூலமாக செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர தாராபுரம், உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவி சேவை மையத்தையும் தொடா்பு கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநரை 0421-2230500 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.