திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியா் பயனடையும் வகையில் கல்விக் கடன் சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 29) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சாா்பில் கல்விக் கடன் சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை( ஜனவரி 29) நடைபெறுகிறது.
திருப்பூா், அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம், பொங்கலூா் வட்டங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு திருப்பூா் ஜெய்வாபாய் பள்ளியில் முகாம் நடைபெறுகிறது. அதேபோல, தாராபுரம், வெள்ளக்கோவில், குண்டடம், காங்கயம், மூலனூா் வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு தாராபுரம் மகாராணி கலை, அறிவியல் கல்லூரியில் முகாம் நடைபெறுகிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களைச் சோ்ந்த மாணவா்கள் உடுமலை வட்டார சேவை மையத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் தேவைப்படும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தின் நகல், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆண்டு வருமான சான்று, ஜாதிச் சான்று நகல், பான் அட்டை, ஆதாா் அட்டை நகல், கல்விக்கட்டண விவரம், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரியாக இருந்தால் அந்த சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாகப் பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை 0421-2971185 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.