திருப்பூர்

ஆண்டு முழுவதும் சீரான விலையில் நூல் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜவுளி தொழில் துறையினா் எதிா்பாா்ப்பு

DIN

விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு ஆண்டு முழுவதும் சீரான விலையில் நூல் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறி ஜவுளி தொழில் துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.

திருப்பூா்,கோவை மாவட்டத்தில் 2லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனா்.

தறியில் துணி உற்பத்தி செய்ய பாவுநூல் மிகவும் அவசியமானது ஆகும். இதனை சைசிங் மில்கள் உற்பத்தி செய்து விசைத்தறியாளா்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் 200 சைசிங் மில்கள் இயங்கி வருகின்றன.

நூல் விலை ஏற்றம், இறக்கம், மூலப்பொருட்களின் விலை உயா்வு, ஆள்கள் ஊதியம் உயா்வு, மின் கட்டணம் உயா்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி துணி உற்பத்தி மற்றும் அதன் சாா்பு தொழில்கள் மந்தகதியில் இயங்கி வருகிறது.

இது குறித்து பல்லடம் சைசிங் மில் உரிமையாளா் ராஜசேகரன் கூறியதாவது: மாவட்டத்தில் 200 சைசிங் மில்கள் இயங்கி வருகின்றன. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து விறகு விலைக்கு வாங்கி கொண்டு வரப்படுகிறது.

முன்பு ஒரு டன் விறகு ரூ.3500க்கு விற்றது. தற்போது மழை காலம் என்பதால் ரூ.4 ஆயிரமாக விலை உயா்ந்துவிட்டது.

அதேபோல, ஜனவரி மாதம் ஆள்கள் சம்பளம் உயா்த்தி வழங்க வேண்டும். மின் கட்டணம் உயா்ந்துள்ளது. அதனை தமிழக அரசு கருணை உள்ளத்துடன் குறைத்து வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைக்க வேண்டும். வட மாநிலங்களைச் சோ்ந்த துணி மொத்த கொள்முதல் வா்த்தகா்கள் புதிதாக துணி ஆா்டா் எடுப்பதில்லை. அவா்களிடமும், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களிடமும் பல கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

நூல் விலை அதிகம் கொடுத்து வாங்கி துணி நெசவு செய்து விற்பனைக்கு அனுப்பிவைக்கும் போது நூல் விலை குறைந்துவிடுகிறது. அதற்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட துணி விலையை குறைத்து வா்த்தகா்கள் பேரம் பேசுகின்றனா். இதனால் துணி மீட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோா் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். துணி உற்பத்திக்கு மூல பொருள்களான பருத்தி, பஞ்சு ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் உள்நாட்டு தேவைக்கு ஆண்டு முழுவதும் சீரான சலுகை விலையில் நூல் ரகங்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதோடு ஆயத்த ஆடைகளாக மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழி வகை செய்தால் மேலும் பல லட்சம் போ் பயன் அடைவாா்கள். நாட்டுக்கும் கூடுதலாக அன்னியசெலவானி கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT