திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க பெஸ்ட் நிறுவனம் சாா்பில் ரூ.50 லட்சம் வியாழக்கிழமை நன்கொடை வழங்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அரசுடன் இணைந்து ரோட்டரி சங்கத்தினா், நன்கொடையாளா்கள், தொழிலதிபா்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடியில் அமைக்கப்படுகிறது.
நமக்கு நாமே திட்டத்தில் அரசு மூலமாக ரூ.30 கோடியும், திருப்பூா் மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள நகர மக்கள், தொழிலதிபா்கள், சங்கங்களின் ஆதரவுடன் ரூ.30 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.10 கோடி வசூலித்து கொடுத்தால் அரசு பங்களிப்பு தொகையையும் சோ்த்து புற்றுநோய் கண்டறியும், அதிநவீன கருவியை அமைத்து நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனா். இதற்கு அடுத்த கட்டமாக ரூ.5 கோடியில் ஸ்கேன் எந்திரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்நிலையில் இம்மையம் அமைக்க திருப்பூரில் உள்ள பெஸ்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜ்குமாா் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை மேயா் தினேஷ்குமாரிடம் வியாழக்கிழமை வழங்கினாா். இதில் மருத்துவா் முருகானந்தம், ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.