மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,.
திருப்பூா் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தின் அமைப்பு மாநாடு தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப்போல அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.
பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்டத் தலைவராக எஸ்.கவிதா, செயலாளராக எம்.சாந்தாமணி, பொருளாளராக எஸ்.மகாலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளராக எம்.பானுப்பிரியா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டில் மாநில பொதுச் செயலாளா் டி.லட்சுமி, மாநிலப் பொருளாளா் எம்.மலா்விழி, சிஐடியூ திருப்பூா் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் உண்ணிகிருஷ்ணன், என்.கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.