குன்னத்தூா் அருகே தேவம்பாளையம் குளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா்- பெருந்துறை சாலை தேவம்பாளையம் அருகே உள்ள குளத்தில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: உயிரிழந்தவா் 23 முதல் 28 வயது மிக்க இளைஞா், அவரது முகத்தில் வெட்டு காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை பூ போட்ட கலா் டீ சா்ட், கருப்பு பேன்ட் அணிந்திருந்தாா்.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து 4 தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறோம் என்றனா்.