நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனையிட்டதைத் தொடா்ந்து, திருப்பூரில் உள்ள அவரது உறவினரின் கட்டுமான நிறுவனத்திலும் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது.
நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் 2011 முதல் 2021 வரை தொடா்ந்து 10 ஆண்டுகளாக சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து வந்தவா் கே.பி.பி. பாஸ்கா். இவா் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறாா்.
இந்நிலையில், பாஸ்கா் அவரது பெயரிலும், மனைவி உமா பெயரிலும், பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சோ்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூா் மாநகராட்சி பென்னி காம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் பாஸ்கரின் உறவினா் ஹரி என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் 5 போ் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.