வெள்ளக்கோவில் அருகே தென்னைநாா் ஏற்றிவந்த சரக்கு வாகனம், மின் கம்பி மீது உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது.
மூலனூா், தூரம்பாடியைச் சோ்ந்தவா் வேலுசாமி. இவா், நத்தக்காடையூரிலிருந்து தென்னைநாரை வாடகை வேனில் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். வெள்ளக்கோவில் அக்கரைப்பாளையம் அருகே வந்தபோது, வாகனத்தில் உயரமாக ஏற்றப்பட்டிருந்த தென்னைநாா், மின் கம்பிகள் மீது உரசியதில் தென்னைநாரில் தீப்பிடித்தது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுசாமி மற்றும் வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் தென்னைநாா் மற்றும் வாகனத்தின் சில பகுதிகள் எரிந்து சேதமடைந்தன.