திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக தலித் கிறிஸ்தவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயா் ஏ.கிறிஸ்டோா் செல்லப்பா தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: கடந்த 72 ஆண்டுகளாக தமிழ் கிறிஸ்தவா்களுக்கு பட்டியலினத்தவா் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் தீண்டாமைக் கொடுமை, கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அரசியல் பிரதிநிதித்துவமும், சட்டப்பாதுகாப்பும் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், சமூக, பொருளாதார நிலையிலும் பின்னடைவை அடைந்துள்ளனா். ஆகவே, தலித் கிறிஸ்துவா்களை எஸ்.சி.பட்டியலில் சோ்க்க வேண்டும் என்றனா். ஆா்ப்பாட்டத்தில், புனித கத்தரீனம்மாள் ஆலயத்தின் பங்குத் தந்தை ஹயாசிந்த் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.