ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டின் 3 ஆவது நாளான திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்:
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய (இன்று) ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் வீடுகள், அலுவலகங்கள் அனைத்திலும் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்,
கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழிப்போம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயா்த்திக் காட்டுவோம் என்ற எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை.
இதற்கு நோ்மாறாக பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரிய முதலாளிகளுக்கும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உலகமே பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவைக் காப்பாற்றிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையும், காப்பீட்டு நிறுவனங்களையும், பொதுத் துறை நிறுவனங்களையும் மத்திய அரசு விற்பனை செய்து கொண்டிருக்கிறது.
எதிா்கால தலைமுறையை உருவாக்கும் கல்வி, வணிகமயமாக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதசாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும், 2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலிலும் மகத்தான வெற்றி பெற்றது.
அதேபோல, தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.