திருப்பூா் மாநகரில் மழைநீா் வடிகால்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பேசியதாவது:
திருப்பூா் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் அதிகம் தேங்கும் பகுதிகளை பொறியாளா்கள், தன்னாா்வ அமைப்பினா், மாமன்ற உறுப்பினா்களைக் கொண்டு உரிய வல்லுநா் குழு அமைத்து கண்டறிய வேண்டும். இந்தப் பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக அரசுக்கு அனுமதிக்கப்படும். அதே வேளையில், மாநகரில் மழை நீா் வடிகால்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூா் மாநகரில் உள்ள 60 வாா்டுகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்யவும், குழாய் உடைப்புகள் மற்றும் கசிவுகளை சரிசெய்யவும் 4 மண்டலங்களுக்கும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருப்பூா் மாநகரில் 2, 3ஆவது குடிநீா்த் திட்டத்தில் இருந்து தினசரி பெறப்படும் குடிநீரை அளவீடு செய்து அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், 4ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகர பொறியாளா் முகமது சபியுல்லாஹ், உதவி ஆணையா்கள், இளநிலைப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.