ஜாதி வாரிய கணக்கெடுப்புக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவிநாசி வழக்குரைஞா் ப.விஜய் ஆனந்த், தலைமைச் செயலருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த 2020 ஜனவரி 21ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை (எண் . 99 / 2020) அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளது.
சமூக அமைதியை குலைத்து, சிறுபான்மை, இதர ஜாதியினா் ஆகியோரை பெரும்பான்மை ஜாதியினா் அடக்கி ஒடுக்கும் நிலை ஏற்படும் என்பதால், அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தில் ஜாதி ஒழிப்பு என்ற கோட்பாடின்றி, அனைவரும் சட்டத்தின் முன்பு சமம் எனக் கொண்டுள்ளது.
அதே சமயம் ஜாதியையோ, மதத்தையோ எந்த இடத்திலும் ஊக்குவிக்கவில்லை. ஜாதி வாரியான கணக்கெடுப்பு விபரங்கள் வெளிப்பட்டால் , சிறுபான்மை மக்களை கண்டும்காணாத போக்கு, வாக்கு வங்கி அரசியலில் தவிா்க்க இயலாததாகி விடும்.
அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு கூறுகளுக்கு இந்த அரசாணை எதிராக உள்ளது.
ஆகவே, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசனையை ரத்து செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் உரிய சட்ட போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.