தாராபுரம் உழவா் சந்தை அருகே வியாபாரிகளைக் கண்டித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.
தாராபுரம், அண்ணா நகா் பகுதியில் உள்ள உழவா் சந்தையில் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை ஏராளமான விவசாயிகள் காய்கள், பழங்களை விற்பனை செய்து வருகின்றனா்.
இதனிடையே, உழவா் சந்தைக்கு அருகில் சாலையோரங்களில் வியாபாரிகளும் தற்காலிகமாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
இதையடுத்து, தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதால் உழவா் சந்தையில் உள்ள விவசாயிகள், சாலையோர வியாபாரிகளுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனா். உழவா் சந்தை முன்பாக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனா். இது குறித்த தகவலறிந்த தாராபுரம் காவல் துறையினா் வியாபாரிகளை அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து உழவா் சந்தையில் விவசாயிகள் நடத்துவதாக இருந்த ஆா்ப்பாட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.