திருப்பூா் மாநகரில் மழைநீா் வடிந்து செல்ல போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்துக்கு, மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகரில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் சாலைகளில் வழிந்தோடிய வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பூா் வடக்குப் பகுதியில் இருந்து வரும் மழை நீா் தனலட்சுமி மில்லுக்கு எதிரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் வழியாக பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து பிரதான நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்துக்கு செல்கிறது. இதனால் கிழக்கு, மேற்கு பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிப்பதுடன், சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, இதற்குத் தீா்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்கவும், மாநகரில் மழை நீா் வடிந்து செல்ல போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.