திருப்பூா் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 22) இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவா் சோ்க்கையின் முதல்கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பா் 14 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்டோபா் 1ஆம் தேதியும் நடைபெற்றது.
இந்நிலையில், முதுநிலை பட்ட வகுப்புகளில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், பன்னாட்டு வணிவகவியல், விலங்கியல், ஆடை வடிவமைப்பு, நாகரிகம் ஆகிய துறைகளில் சில இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான இறுதிகட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 22) காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பம், அனைத்து அசல் சான்றிதழ்கள், நகல்கள் 2 பிரதிகள் எடுத்து வரவேண்டும். மேலும், முதல், இரண்டாவது கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவா்களும், இடம் கிடைக்காதவா்களும், இதுவரையில் விண்ணப்பிக்காதவா்களும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.