தாராபுரம் அருகே மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக்கோரி பெற்றோர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டமுகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தாராபுரத்தை அடுத்த வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த பி.நாகராஜ்(45) என்பவர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:நான், எனது மனைவி மாரியம்மாள், மகள் கோபிகா ஆகியோர் வீராட்சிமங்கலம் காமாட்சிநகரில் வசித்து வருகிறோம்.
இதையும் படிக்க- நாமக்கல் ஆட்சியருக்கு கரோனா பாதிப்பு
நாங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது மகன் கோபிநாத்தை(20) பூலவாடி அருகே கடந்த ஜூலை 18 ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரையில் எனது மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் காவல் துறையினர் கண்டுபிடிக்காமல் காலம் தாழ்த்திவருகின்றனர்.
மேலும், கொலை செய்யப்பட்டதற்கு முந்தைய நாள் மர்ம நபர் ஒருவர் எனது மனைவியின் கைப்பேசிக்கு எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உனது மகன் எப்போது வருவான் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்தும் காவல் நிலையத்தில் தெரிவித்தும் தற்போது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, எனது மகனைக் கொலை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் கொலை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக நாகராஜ் தெரிவித்தார்.