திருப்பூா் மாவட்டம் அவிநாசி, காங்கயம், பெதப்பம்பட்டி ஆகிய இடங்களில் ரூ.5.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை (அக்டோபா் 18) திறந்துவைக்கிறாா்.
இது குறித்து தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்காக எண்ணற்ற திடங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டம் அவிநாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் ஏலக்கூடம், காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் அலுவலகம், ஏலக்கூடம், பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் ஏலக்கூடம் மற்றும் சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இந்த 3 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.5.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வரும் திங்கள்கிழமை திறந்துவைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.