அவிநாசி அருகே பெருமாநல்லூரில் பணிபுரியும் 28 தொழிலாளர்களுக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பனியன் நிறுவனத்திற்கு அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஆதிதிராவிடர் காலனி அருகே பின்னாலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்பட 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வட மாநிலத் தொழிலாளர்கள் அப்பகுதியில் தங்கி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக பெருமாநல்லூர் சுகாதாரத்துறையினர், ஒவ்வொரு நிறுவனங்களாக ஆய்வு செய்து, கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் பெருமாநல்லூரில் இயங்கி வரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் 170க்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத் துறையினர் 7ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இப்பரிசோதனையில், பெண் தொழிலாளர்கள் உள்பட 28 தொழிலாளர்களுக்கு புதன்கிழமை கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தொழிலாளர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கவும், மீதமுள்ளவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 28 தொழிலாளர்களுக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர், பனியன் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
இதேபோல அவிநாசி அருகே வஞ்சிபாளையம் ரயில் நிலையம் அருகே மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன், சமூகநலத்துறை வட்டாட்சியர் நந்தகோபால், மண்டல துணை வட்டாட்சியர் கீர்த்தி பிரபா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைக்கு மாறாக, சமூக இடைவெளியின்றி திறக்கப்பட்டிருந்த தேநீர் கடைக்கு சீல் வைத்தனர்.