திருப்பூா்: திருப்பூரில் முழுபொதுமுடக்கம் காரணமாக சாலைகள் அனைத்தும் திங்கள்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திங்கள்கிழமை முதல் மே 24 ஆம் தேதி வரையில் முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூா் மாநகரில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பலசரக்கு கடைகள் பிற்பகல் 12 மணி வரையில் செயல்பட்டன. அதே போல், மாநகரில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேநீா் கடைகள், உணவகங்களில் பாா்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
திருப்பூா் மாநகரில் பேருந்துப் போக்குவரத்து , டாக்ஸி, ஆட்டோக்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டதால் குமரன் சாலை, பி.என்.சாலை, அவிநாசி சாலை, புஷ்பா ரவுண்டானா, மங்கலம் சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அதே வேளையில்,மாநகரில் உள்ள மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி, அணைப்பாளையம், அம்மாபாளையம், வீரபாண்டி பிரிவு, கோவில்வழி ஆகிய இடங்களில் காவல்த் துறையினா் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனா். அடையாள அட்டை இல்லாமல் வெளியில் வரும் நபா்களை எச்சரித்து அனுப்பினா். மேலும், ஒரு சில இடங்களில் வெளியில் சுற்றிய நபா்களுக்கு காவல்த் துறையினா் அபராதம் விதித்தனா்.