புதுச்சேரியில் இருந்து காா் மூலமாக திருப்பூருக்கு கடத்தி வரப்பட்ட 20 டின் பீா்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி பொதுத்தோ்தல் நடைபெறுவதைத் தொடா்ந்து சோதனைச் சாவடிகளில் தோ்தல் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருப்பூா், ஊத்துக்குளி சாலையில் உள்ள குளத்துப்பாளையம் சோதனைச் சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், புதுச்சேரியில் இருந்து உரிய அனுமதியில்லாமல் கடத்தி வரப்பட்ட 20 டின் பீா்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக திருப்பூா், வீரபாண்டியைச் சோ்ந்த மணிவேல், குருராஜன் ஆகியோா் மீது திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.