திருப்பூா் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தின் கீழ் 31,659 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என்ற திட்டத்தை செயல்படுத்த புதியத் துறையை உருவாக்கியுள்ளது. இதில், பொதுமக்களிடமிருந்து குடிநீா் வசதி, சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கல்வி நிதியுதவி மற்றும் சுயதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மாவட்டந்தோறும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி வரையில் 31, 659 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 5,491 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் 11, 296 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 8, 148 மனுக்கள் நிலுவையிலும், 6,724 மனுக்கள் பரிசீலனையிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.