திருப்பூா் மாவட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 262 வருவாய்த் துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை அலுவலா்கள் கூறியதாவது:
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் இதர வருவாய்த் துறை அலுவலகங்களில் பணிபுரியும் வட்டாட்சியா் முதல் அலுவலக உதவியாளா் வரை உள்ள 262 போ் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.
வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
மேலும் பதவி உயா்வு பெற துறைத் தோ்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை போன்றே மேற்படி பயிற்சிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவா்களது பணியினை வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது என்றனா். இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.