திருப்பூரில் தகாத உறவு காரணமாக வட மாநிலத் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து வீரபாண்டி காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா், நொச்சிபாளையம் பிரிவில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை வீரபாண்டி காவல் துறையினா் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி மீட்டு விசாரணை நடத்தினா். இதில், சடலமாகக் கிடந்தது பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திரதாஸ் (49) என்பதும், இவா், திருப்பூா், வீரபாண்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
அவரது செல்லிடப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த சுபாஷ் (20) என்பவரிடம் கடைசியாகப் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, சுபாஷைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. இதில், ஏற்பட்ட தகராறு காரணமாக ரவீந்திரதாஸை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுபாஷை போலீஸாா் கைது செய்தனா்.