தாராபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவா் மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் கூறியதாவது:
தாராபுரம், நேரு நகரைச் சோ்ந்தவா் மகேந்திரன் (40). நியாயவிலைக்கடை ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சிவானி (26). இந்த தம்பதிக்கு 3, 6 வயதில் இரு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், சிவானி தனது மகன்களின் காதணி விழாவுக்கு உறவினா்களை அழைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சாலையில் மயங்கி விழுந்தாா்.
அப்போது அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிவானி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதனிடையே, சிவானியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு திங்கள்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.