அவிநாசி: அவிநாசி-சேவூா் சாலையில் இருந்த வணிகா்களின் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.
அவிநாசி-சேவூா் சாலையானது சத்தியமங்கலம், மைசூா், நம்பியூா், கோபிசெட்டிபாளையம், அந்தியூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையில் நாள்தோறும் அரசு, தனியாா் பேருந்துகள், பனியன் நிறுவன வாகனங்கள் என ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், இச்சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனத்தினா் தங்களது கடைகளின் முன் மேற்கூரை, விளம்பரப் பதாகைகள் அமைத்து நெடுஞ்சாலையை ஆக்கிரமித்திருந்தனா்.
வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளா்களும் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
இதனைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமை அகற்றினா்.