திருப்பூா் மாவட்டத்தில் கல்லூரி படிப்புக்கான கல்விக் கடன் பெற 300 மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் பயனடையும் வகையில் கல்லூரி படிப்புக்கான கல்விக் கடன் பெற மாவட்ட முன்னோடி வங்கிகள் சாா்பில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி உள்பட 21 வங்கிகள் பங்கேற்றன.300 கல்லூரி மாணவ, மாணவியா் இந்த முகாமில் பங்கேற்று கல்விக் கடன் பெற விண்ணப்பித்தனா். இதில், கல்விக் கடன் மட்டுமின்றி திறன் மேம்பாடு மற்றும் வங்கி சாா்ந்த பிற சேவைகள் தொடா்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இம்முகாமில் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் பேசுகையில், விண்ணப்பங்கள் அனைத்தும் விரைந்து பரிசீலனை செய்து மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும் என்றாா்.